Monday 19 September 2011

அன்னா ஹசாரேவும் அரசியல் நாடகங்களும் ..

அன்னா ஹசாரேவும் அரசியல் நாடகங்களும் .....

ஊழலுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது வடக்கில் ... ஊழல் என்ற அரக்கனை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக அணிதிரள்வார்கள் , இது இன்றையமோசமான நிலையில் நம் நாட்டுக்கு கண்டிப்பாக தேவையான ஒன்றுதான், ஆனால் அந்த புள்ளி கரும்புள்ளியாக அமைந்து விடக்கூடாதல்லவா? அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் பற்றி எனக்கு இருக்கும் சில சந்தேகங்கள் என்னை அவரை முழுமையாக ஆதரிக்கவிடாமல் தடுக்கின்றன....
அவரின் சில நடவடிக்கைகள் ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறாரா இல்லை காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறாரா என்று சந்தேகப்படவைக்கின்றன? அவர் காங்கிரஸை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? நம் நாட்டில் காங்கிரஸ் மட்டும்தான் ஊழல் செய்து கொண்டு இருக்கிறதா? ஏன் கர்நாடகாவில் மாற்றி மாற்றி ஊழல் புகாரில் சிக்கி சுப்ரீம் கோர்ட்டால் கண்டிக்கபட்ட ஒருவரை முதல்வர் பதவியில் இருந்து இறக்க ரொம்பவும் யோசித்த ஒரு கட்சியை பற்றி அவர் வாயே திறப்பதில்லை, மாறாக அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை போல அவர் நடந்து கொள்வது ஏன்? நரேந்திர மோடியை ஊழல் இல்லாத அரசியல்வாதிஎன்று தன் வாயால் உளறிவிட்டு மீடியாக்கள் கண்டனம் தெரிவித்தவுடன் நான் சொல்லவந்ததே வேற என்று கைப்புள்ள வடிவேலு போல அசடு வழிந்தது ஏன்?
இவர் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று உண்மையிலேயேநினைத்தால் காங்கிரசுக்கு ஊழலில் கொஞ்சமும் சளைக்காத BJP கட்சியின் ஆதரவை வேண்டாம் என்று தைரியமாக உதறிவிட்டு மக்களின் ஆதரவை மட்டுமே நம்பி இறங்கி இருக்கலாமே... BJP , ஆர்‌எஸ்‌எஸ் என்று யோக்கிய சிகாமணிகளின் ஆதரவை அவர் ஏன் தேடி போகவேண்டும்... ஊழல் எதிர்ப்பு உணர்வுக்கு அரசியல் சாயம் பூசி வேறு ஒரு கட்சியை ஆட்சியில் உக்காரவைக்க வேண்டும் என்பதுதான் அண்ணாவின் உள்நோக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் இதனால் ஏற்படுகிறதே...
அதேபோல அவர் காங்கிரஸ் கட்சியையும் அதன் அமைச்சர்களையும் மட்டுமேஊழல்வாதிகள் என்று எதிர்த்துக்கொண்டு இருக்கிறார் , ஆனால் அவர்களுக்கு பின்னால் இருந்து கொண்டு அவர்களை இயக்கும் இந்திய பணமுதலைகளை அவர் கண்டுகொள்வதே இல்லை... ஊழலின் ஆணிவேறே அவர்கள்தானே , அவர்களை ஏன் இவர் தன்னுடைய போராட்டங்களில் விமர்சிப்பதே இல்லை... அடுத்து பி‌ஜெ‌பி ஆட்சிக்கு வந்தால் இவர்களின் தயவு தேவைப்படும் என்பதால் அவர்களை பற்றி வாயே திறப்பதில்லையோ என்ற சந்தேகமும் இதனால் வலுக்கிறது...
சரி ஊழலுக்கு எதிராக போராடும் இவர் என்ன யோக்கியனா என்று காங்கிரஸ் இவர் மீது ஒரு ஊழல் குற்றசாட்டை வைத்தது , "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்"க்கு மகாராஷ்ட்ரா அரசு கொடுத்த பணத்தில் 10 லட்சம் ரூபாய் பணத்தை இவர்கள் கையாடல் செய்து இருக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை பல வருடங்களுக்கு முன்னாள் வெளிவந்தது .... அவர் இந்த புகாரை சட்டப்படி சந்தித்து தான் ஊழல்வாதி இல்லை என்று நிரூபித்து இருந்தால் இவர்மேல் நம்பிக்கை வந்திருக்கும் , ஆனால்இன்று காங்கிரஸ் அந்த அறிக்கையை தூசி தட்டி வெளியிட்டதும் என் மேல் சேறு வாரி இறைக்கிறார்கள் , அவர்கள் இந்த அறிக்கையை திரும்ப பெரும் வரைக்கும் உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று ஸ்டண்ட் அடித்தார் இந்த இரண்டாவது இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவர் இரண்டாம் மோகன்லால் காந்தி...
இவர் ஊழலுக்கு எதிராக போராடும் முன்னால் தன் மீது இருக்கும் இந்த ஊழல் கரையை துடைத்து விட்டல்லவா இறங்கி இருக்க வேண்டும்...
அதே போல லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொண்டு வரப்படுவதை இவர் ஏன் கடுமையாக எதிர்க்கிறார்? ஏன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊழலலே செய்வதில்லையா? சில சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் உண்மையிலேயே சேவை மனப்பான்மையோடு தொடக்கபட்ட தொண்டு நிறுவனங்களை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் கருப்பு பணத்தை காப்பாற்ற பணமுதலைகளாலும் , அரசியல்வியாதிகளாலும் மறைமுகமாக நடத்தபடுபவைதானே, அங்கு மட்டும் ஊழல் இருக்காது என்று எப்படி கண்டிப்பாக சொல்ல முடியும்....
இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது ஊழல் ஒழிந்து உலக நாடுகளின் மத்தியில்இந்தியா ஒளிர்ந்துவிடாதா என்ற நம் மக்களின் ஏக்கத்தை பயன்படுத்தி ஹசாரேவும்அவர் பின்னால் இருப்பவர்களும் நடத்தும் அரசியல் நாடகம் போல ஒரு சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை... ஆனால் ஹசாரேவின் இந்த போராட்டம் மூலம்விழைந்திருக்கும் ஒரே நன்மை , ஊழல் ஒழிய வேண்டும் , நாடு முன்னேற வேண்டும் என்ற வேட்கை நம் நாடு முழுவதும் மக்கள் மனதில் காட்டு தீயாய் பரவி கிடக்கிறது என்ற உண்மையை நம் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது... அதற்காக மட்டும் ஹசாரேவுக்கு ஒரு இந்தியனாக நன்றிசொல்லியே ஆகவேண்டும்...
டிஸ்கி 1 : அண்ணா என்ற பெயருக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகை போல , அன்று ஒரு அண்ணா தென்னிந்தியாவில் காங்கிரசுக்கு ஆப்பு வைத்தார் , இன்று வடக்கில் ஒரு அன்னா ஆப்பு வைக்க துடித்து கொண்டிருக்கிறார்...
டிஸ்கி 2 : இந்த பதிவில் நான் என்னுடைய சந்தேகங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன் , மேலும் நான் ஹசாரேவை சந்தேகபடுவதால் காங்கிரஸை ஆதரிப்பவன் என்று அர்த்தம் கிடையாது.. ஊழல் முற்றும் ஒழிய வேண்டும் என்று ஆசைப்படும் சாதாரண குடிமகன்களில் நானும் ஒருவன் ...

No comments:

Post a Comment